சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (8.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின.


இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 


இந்த நிலையில், ஐந்தாவது நாளாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (8.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023  முதல் 7.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.  புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதனால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் இன்று (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கும் விடுமுறை


அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் ஆகிய 6 வட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 


மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து கன மழை பெய்ததால் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இரண்டு வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.