நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வுக்கு செப்டம்பர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 9 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் நவம்பர் 1ஆம் தேதி காலையிலும் இரண்டாம் நாள் நவம்பர் 2ஆம் தேதி காலையிலும் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது.
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு
இந்த நிலையில் தேர்வு தேதிகளை உடனே மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.
அலட்சியமாக செயல்படும் திமுக அரசு
ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? பொம்மை முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.