சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு தொடர்பான நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சுற்றறிக்கை முற்றிலும் போலியானது என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அண்மையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்தகட்டமாக விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகின.
இணையத்தில் வெளியான சுற்றறிக்கை
இந்த நிலையில், மதிப்பெண் சரிபார்த்தல், திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகலைப் பெறுதல் மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை சிபிஎஸ்இ வாரியம் ரத்து செய்துவிட்டதாக ஒரு சுற்றறிக்கை இணையத்தில் வேகமாகப் பரவியது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிபிஎஸ்இ நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் அந்தச் சுற்றறிக்கை போலியானது என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.
நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும்
விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண் சரிபார்த்தல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுதல் ஆகிய எந்த நடைமுறைகளும் ரத்து செய்யப்படவில்லை என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி அந்த நடைமுறைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், கல்வி வாரியத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையிலும், மாணவர்களைக் குழப்பும் வகையிலும் இதுபோன்ற போலியான மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களின் செய்திகளை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தை மட்டுமே பார்வையிட அறிவுறுத்தல்
தேர்வு முடிவுகள், மறுமதிப்பீடு நடைமுறைகள் மற்றும் கல்வி வாரியத்தின் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்த எந்தவொரு உண்மையான தகவலுக்கும் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்ற வலைத்தளத்தை மட்டுமே பார்வையிடுமாறும், அதில் வெளியாகும் அறிவிப்புகளை மட்டுமே அதிகாரப்பூர்வமானதாகக் கருதுமாறும் சிபிஎஸ்இ வாரியம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
