சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 7) கடைசித் தேதி ஆகும்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி அன்று வெளியாகின. இந்த முறை முதல் தடவையாக ஓஎஸ்எம் எனப்படும் டிஜிட்டல் மதிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தாங்கள் எழுதிய தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை, விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடிகள் நடந்துள்ளன என்று புகார்க் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் மதிப்பெண்ணில் சிக்கல் என கருதும் மாணவர்களுக்காக, விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பை சிபிஎஸ்இ வழங்கியிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
யாரெல்லாம்விண்ணப்பிக்கலாம்?
சிபிஎஸ்இ விதிமுறைகளின்படி, ஏற்கனவே மதிப்பெண் சரிபார்ப்பு செய்து, தங்களின் விடைத்தாள் நகலை முறைப்படி பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கட்டணம்எவ்வளவு?
மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு கேள்விக்கும் தலா ரூ.100 வீதம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்க்கிங் மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். ஆஃப்லைன் அல்லது டி.டி. முறை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
எப்படிவிண்ணப்பிப்பது?
மாணவர்கள் முதலில் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in அல்லது cbseit.in என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள 'CBSE Class 12 Re-evaluation' அல்லது 'பரீக்ஷா சங்கம்' (Pariksha Sangam) என்ற பிரத்யேக இணைப்பைக் கண்டறிந்து கிளிக் செய்யவும்.
- அடுத்துத் தோன்றும் புதிய திரையில், உங்களின் பதிவு எண் (Roll Number), பள்ளி எண் (School Number) மற்றும் தேர்வு மைய எண் (Center Number) ஆகிய விவரங்களைத் தவறாமல் உள்ளிடவும்.
- இப்போது நீங்கள் எந்தப் பாடத்தில், எந்தக் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மறுமதிப்பீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கேள்விகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் கணக்கிடப்படும். அதனை ஆன்லைன் பேமெண்ட் கேட்வே மூலம் செலுத்தி, சப்மிட் பட்டனை அழுத்தவும்.
- வெற்றிகரமாக விண்ணப்பித்த பின்பு, விண்ணப்பப் படிவத்தை எதிர்காலத் தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மாணவர்கள் மறந்துடாதீங்க..
மறுமதிப்பீட்டின் முடிவில் மாணவர்களின் மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது போலவே, சில நேரங்களில் மதிப்பெண்கள் குறையவும் வாய்ப்புள்ளது. மறுமதிப்பீட்டிற்குப் பிறகு சிபிஎஸ்இ அறிவிக்கும் மதிப்பெண்ணே இறுதியானது. மதிப்பெண் குறைந்தால் பழைய மதிப்பெண்ணை வழங்கக் கோர முடியாது. மேலும், இதற்குப் பிறகு மதிப்பெண்கள் தொடர்பாக எந்தவொரு மேல்முறையீடும் செய்ய முடியாது.
இதுவரை 70 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரை வந்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. எனினும் விண்ணப்ப சாளரம் திறக்கப்பட்ட பிறகு லட்சக்கணக்கில் சைபர் அட்டாக்குகள் சரமாரியாக நடந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
