சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று வெளியான செய்திக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆங்கிலப் பாடத்துடன் தொடங்கி, காலை 10.30 முதல் 1.30 மணி வரை நடந்தது. இந்தத் தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். 

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மறுப்புத் தெரிவித்துள்ளது.