என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் ஊழல் (Corruption in the Judiciary) என்ற தலைப்பிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இதுதொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் என்சிஇஆர்டி மற்றும் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.

Continues below advertisement

நீதிமன்றம்ஆவேசம்

இதுதொடர்பாக தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அந்தப் பாடப்புத்தகத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உடனடியாகத் தடை செய்ததோடு, அனைத்து நகல்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. நீதிபதிகள், "இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் இந்த வழக்கை நாங்கள் சாதாரணமாக விடப்போவதில்லை.

இது ஒரு ஆழமான சதித்திட்டம் போலத் தெரிகிறது. அவர்கள் களங்கப்படுத்தி விட்டார்கள், இன்று நீதித்துறை ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது," என்று தலைமை நீதிபதி தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்தார்.

Continues below advertisement

NCERT மன்னிப்பு

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "எங்கள் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு" என்ற அந்தப் பாடத்தை எழுதிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் இனி எந்த அரசுப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.

இதற்கிடையில், NCERT வெளியிட்ட அறிக்கையில், "நீதித்துறை குறித்த தவறான தகவல்கள் எதிர்பாராமல் இடம்பெற்றுவிட்டன. இதற்காக நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம். இந்திய நீதித்துறையின் மாண்பையும், அதன் உயரிய மதிப்பையும் நாங்கள் முழுமையாக உணர்ந்து மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, 2026-27 கல்வியாண்டிற்குள் புதிய பாடம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கப்படாதவருத்தம்

இருப்பினும், "தவறுதலாக நடந்துவிட்டது" என்று NCERT கூறிய விளக்கத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மன்னிப்பு அறிக்கையானது நீதிமன்றம் எதிர்பார்த்த அளவுக்கு உண்மையான வருத்தத்தைப் பதிவு செய்யவில்லை என்றும், இது ஒரு திட்டமிடப்பட்ட அவதூறு செயல் என்றும் நீதிமன்றம் கருதுகிறது. புத்தகத்தின் உள்ளடக்கத்தை இணையத்தில் பகிர்வதற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.