12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இரண்டு கட்டமாக மே 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று வெளியான தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றது. எனினும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று (மே 8) வெளியான நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

12ஆம் வகுப்பு முடிவுகளைத் தொடர்ந்தே மாணவர்கள் உயர் கல்வியில் சேர முடியும். கல்லூரியில் சேர்க்கை பெற முடியும் என்பதால், மாணவர்கள் தவிப்புடனும் காத்திருக்கின்றனர்.

தேர்வு முடிவுகள் இரண்டு கட்டமாக வெளியீடா?

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இரண்டு கட்டமாக வெளியிடப்படும் என்றும் மே 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. எனினும் இதற்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. இது போலிச் செய்தி என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.