சுமார் 52 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  மும்மொழிகளைக் கற்க வாய்ப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்த நிலையில், அவரின் கூற்றை தமிழக தகவல் சரிபார்ப்பகம் ஆணித்தரமாக மறுத்துள்ளது.


தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை குறித்த விவகாரம் பற்றி எரியும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பை தமிழக அரசு மறுப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். 


இதுகுறித்து தமிழ்நாடு ஃபேக்ட் செக் யூனிட் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


“தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும் பொழுது, தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க கூடாதா?” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதற்கு எந்தத் தரவும் இல்லை !


அரசுப் பள்ளிக்கு ஒரு பாடத்திட்டம் , தனியாருக்கு ஒரு பாடத்திட்டம் என்று இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான சீரான கல்வியைக் கொடுக்கும் உயரிய நோக்கத்தில், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார்.


விரும்பிப் படிக்க எந்தத் தடையும் இல்லை


தமிழ்நாட்டில் கட்டாய மொழித் திணிப்பை எதிர்க்கும் நமது அரசு, விரும்பி படிக்க எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அவ்வகையில் தனியார் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயம் என்ற சூழல் இல்லை .


தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் : 58,000


அதில் தனியார் பள்ளிகள் சுமார் : 12,690


இதில் சிபிஎஸ்இ பள்ளிகள் வெறும் : 1,835


இதில், சிபிஎஸ்இ பள்ளிகள் தவிரக் கட்டாய இந்தி பாடம் எங்கும் இல்லை ! பிற தனியார் பள்ளிகளில் எந்தப் பொதுத் தேர்விலும் இந்தி கிடையாது.


ஆக, தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயம் . சிபிஎஸ்இ, பிற மாநிலங்களில் மாறிச் செல்ல வாய்ப்புள்ள குழந்தைகளுக்காக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட திட்டம். எங்குச் சென்றாலும் ஒரே பாடத்திட்டத்தைத் தொடர உதவும். அதன் நோக்கம் வேறு.






நிலை இவ்வாறு இருக்க, பல லட்சம் மாணவர்கள் இந்தி படிப்பதாக மனம் போன போக்கில் ஒரு தப்புக்  கணக்கை உருவாக்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தைப் பரப்ப முயலுவது தவறு’’.


இவ்வாறு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.