ஐஐடி மெட்ராஸில் இலவசமாக கணினி அறிவியல் படிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் அனைவருமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனங்களில் ஒன்று ஐஐடி மெட்ராஸ். இந்திய தொழில்நுட்ப மையங்களில் இது பழமையானதும் கூட. இந்நிலையில் இக்கல்வி நிறுவனம் அனைவருக்கும் உயர் தரத்துடன் கூடிய கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் கிடைக்கச் செய்யும் விதமாக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இதற்காக மெட்ராஸ் ஐஐடியின் கணினி அறிவியல் பேராசிரியர்கள் இணைந்து, கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வமுடைய அனைவரும் அணுகும் வகையில் முக்கிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட ஆன்லைன் போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.


இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


இந்தியாவின் கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்பது சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடியின் தொலைநோக்குப் பார்வை. அதனை நனவாக்கும் முயற்சியின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம்.


அதன்படி, கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை http://nsm.iitm.ac.in/cse/ என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதில், புரோகிராமிங் (Programming), டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures), கம்ப்யூட்டர் ஆர்கனைசேஷன் (Computer Organisation), அல்காரிதம் (Algorithms) ஆகிய முக்கிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் மாணவர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல் தொற்றுநோய் காலத்தில் சென்னை ஐஐடி மாணவர்களுக்காக ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் நடத்தப்பட்ட நேரடி விரிவுரைகளை யூடியூப்-பில் காணும்படி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுகுறித்து பேசிய ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை (CSE) தலைவர் பேராசிரியர் சி.சந்திரசேகர் கூறுகையில், "மெட்ராஸ் ஐஐடியில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்காக கணினிப் பேராசிரியர்கள் எடுத்த நேரடி வகுப்புகளின் பதிவுகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இவை நிச்சயமாக வெகுவாக உதவி செய்யும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் கணினி அறிவியல் பாடங்கள் சார்ந்த சந்தேகங்களை சரியான முறையில் புரிந்துகொண்டு பாடத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறோம்.


அதுமட்டுமல்லாமல் கணினி அறிவியல், பொறியியல் துறைகளில் முக்கியமான மற்றும் அடிப்படை பாடங்களை எவ்வாறு திறம்பட கற்பிப்பது, சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன்களை மாணவர்களிடம் எப்படி கொண்டு வருவது என்பதில் பேராசிரியர்களுக்கும் இந்த வீடியோக்கள் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.


இந்தியாவில் குறிப்பாக ஐஐடி.க்களில் மிகவும் விரும்பப்படும் பொறியியல் துறைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முக்கியமான ஒன்றாகும். மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயில அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.  ஆனால், மெட்ராஸ் ஐஐடியில் குறைவான இடங்களே உள்ளதால் கடும் போட்டியில் புள்ளி மதிப்பெண் இடைவெளியில் மாணவர்கள் வாய்ப்பைத் தவரவிடுவதும் உண்டு. இந்நிலையில், ஐஐடி மெட்ராஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபேஷ் நஸ்ரே கூறுகையில்,  "ஐஐடி மெட்ராஸில் படிக்க முடியாத மாணவர்களுக்காகவும், தொலைதூர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் உதவும் நோக்கில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படும் அதே பாடத் தொகுதிகள் அவர்களுக்கும் கிடைக்கும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான பாடத் தொகுப்புகள் கிடைக்கும் என்பதை இந்த முன்முயற்சி உறுதிசெய்யும் " என தெரிவித்தார்.


மாணவர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், நேரடி பயிற்சி அமர்வுகளை நடத்த மூத்த மாணவர்களை ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல், போர்ட்டலில் கல்வி பயில்வோர், சுய மதிப்பீட்டிற்காக வினாடிவினா போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் படிப்பு குறித்த அவர்களின் புரிதலின் அளவையும் கண்டறியலாம்.