தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாட்களாக பள்ளிக்கே வராத மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைந்தது.


8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.


கொரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021-22ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.




கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளிகள் திறப்பில் தாமதம், அதனால் ஏற்பட்ட கற்றல் இழப்பும், பாடத்திட்டம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 


ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அதே நேரத்தில் நீண்ட நாட்களாகப் பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண