அனைத்து பள்ளிகளிலும்‌ ஆதார்‌ எண்‌ பெறுவதற்கு புதிய  பதிவுகள்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ புதுப்பித்தல்‌ தொடர்பான பணியினை மேற்கொள்வது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுரு கூறி உள்ளதாவது:


''மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள்‌, மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ்‌, வண்ணப்‌ பென்சில்கள்‌, கணித உபகரணப்பெட்டி, புவியியல்‌ வரைபட புத்தகம்‌, கம்பளிச்‌ சட்டை, மழைக்கால ஆடை, உறைக்‌ காலணி, காலுறைகள்‌, பேருந்து பயண அட்டை மற்றும்‌ மிதிவண்டிகள்‌ போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன்‌ மூலம்‌ மாணவர்களின்‌ தேவைகள்‌ முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கு அளிக்கப்படும்‌ நலத்திட்டங்கள்‌ பயனாளிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக அனுப்புவதற்கு ஆதார்‌ எண்‌ அவசியமாகிறது.


தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்‌தொகை, ஊக்கத்‌ தொகை


பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ மாணவ, மாணவியர்களின்‌ நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ அனைவருக்கும்‌ ஆதார்‌ அட்டையை வழங்கிடுவது அவசியமாகும்‌. குறிப்பாக 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து நிலை மாணவர்களும்‌ இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்‌ தொகைகள்‌ மற்றும்‌ ஊக்கத்‌ தொகைகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவி மற்றும்‌ ஊக்கத்‌ தொகை அனைத்தும்‌, மாணவ மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில்‌ முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும்‌ விதமாக, நேரடி பயனாளர்‌ பரிமாற்றம் மூலம்‌ பயனாளர்களின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும்‌ முறை நடைமுறைப்‌படுத்தப்பட்டுள்ளது.


“பயிலும்‌ பள்ளியிலேயே ஆதார்‌ பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின்‌ கீழ்‌ அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார் பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ அப்பள்ளியிலேயே ஆதார்‌ எண்‌ பெறுவதற்கு புதிய பதிவுகள்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ புதுப்பித்தல்‌ தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னனு நிறுவனத்தினைக்‌  கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌ மேற்கொள்ள அனுமதியளித்தும்‌, அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை அலுவலர்களுக்கான பணிகள்‌ மற்றும் பொறுப்புகள்‌ சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.


ஆதார்‌ பதிவு மற்றும்‌ புதுப்பித்தல்‌


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம்‌, இந்தியத்‌ தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார்‌ பதிவுக்‌ கருவிகளைக்‌ கொள்முதல்‌ செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம்‌ ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம்‌, ஆதார்‌ பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார்‌ தரவு உள்ளீட்டாளர்களைத்‌ தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும்‌ ஆதார்‌ பதிவு மற்றும்‌ புதுப்பித்தல்‌ பணிகளை மேற்கொண்டு வருகின்றன.


இந்நிலையில்‌, “பயிலும்‌ பள்ளியிலேயே ஆதார்‌ பதிவு” என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும்‌ கல்வி ஆண்டின்‌ பள்ளி துவக்க நாளில் அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள வட்டாரங்களிலும்‌ முழுவீச்சில்‌ செயல்பட உள்ளது.


இந்நிகழ்வினை, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரகுருபரன்‌ தெரிவித்துள்ளார்.