தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் படி, நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு 38 கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.


அவை பின்வருமாறு:



  • ஆசிரியர்கள் சாபமாகப் பார்க்கும் EMIS ஒரு வரம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். அதற்கேற்ப அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.

  • ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு  சிறப்பு குறைதீர் பிரிவு அறிவிக்க வேண்டும்.

  • பள்ளிநாட்களில் பயிற்சி கூடாது என்பதை அறிவிக்க வேண்டும்.

  • கோடை விடுமுறையில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்பதை உறுதி செய்தல்

  • ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்புச் சட்டம் அறிவித்தல்

  • அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பொருட்களை சம்பந்தப்பட்ட CRC மையங்கள் வழியே வழங்கிட வகை செய்தல்.

  • அரசுப்பள்ளிகளுக்கு ஒரே நிறம், ஒரே தரம் என்னும் அடிப்படையில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு நிறமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு நிறமும் அறிவித்து செயல்படுத்தல்

  • மகப்பேறுவிடுப்பு இடங்களில் பதிலி ஆசிரியர்களை நியமித்தல்

  • மண்டல அளவில் இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்தல்

  • தமிழ்நாட்டிற்குள்ளேயே இருவகையான ஊதியம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கான 
    ஊதியப் பிரச்சினையைச் சரி செய்தல்

  • தேர்வுமுறையில்  6 ம் வகுப்பு முதலே OMR  sheet அறிமுகம் செய்தல்

  • நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒன்று,
    உயர்நிலைப்பள்ளிகளுக்கு இரண்டு,
    மேல்நிலைப்பள்ளிகளுக்கு மூன்று என SMART CLASS ROOM வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

  •  ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாதிரிப்பள்ளியை ஏற்படுத்த வேண்டும்

  • அரசுப்பள்ளிகள் அத்தனையிலும் தமிழ்வழிக்கல்வி செயல்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்

  • தொடக்கப்பள்ளிகள் அத்தனையும் தாய்மொழியிலேயே செயல்பட சட்ட முன்வடிவைக் கொண்டுவர வேண்டும்.

  • BEO அலுவலங்களில் போதிய அமைச்சுப் பணியாளர்களை நியமித்தல்

  • தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு அல்லது பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என்பதை உறுதி செய்தல்

  • அனைத்துப் பள்ளிகளிலும் நிரந்தரத்  துப்புரவுப் பணியாளர்களை நியமித்தல்

  • சமூகநலத்துறை மூலம்
    LKG , UKG க்கு தனி ஆசிரியர்கள்

  • 20 ஆண்டுகளுக்கு மேலாகப் எவ்விதப் பணிப்பாதுகாப்பும் இன்றிப் பணியாற்றும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களின் நியமனத்தை உறுதி செய்தல்

  • ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் உளவியல் நிபுணர்கள் குழுவை  ஏற்படுத்துதல்

  • மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்களில் தனி வாகனம் இல்லாமல் இருப்பவர்களுக்கு வாகனம் வழங்கிட வகை செய்ய வேண்டும்.

  • பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அரசாணைகளும் தமிழில் மட்டுமே இருந்திட உத்தரவிட வேண்டும்

  • பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்கள் வழங்கும்பொழுது,
    பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் தனிப் பாடநூல்கள் வழங்கிட வகை செய்ய வேண்டும்

  • அனைத்துப் பள்ளிகளிலும் இணையதள வசதியுடன் கூடிய பிராட்பேண்ட் சேவையை BSNL நிறுவனம் மூலம் வழங்கிட வேண்டும்

  • அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகம் ஏற்படுத்திட வகை செய்ய வேண்டும்

  • LKG , UKG செயல்படும் பள்ளிகளில் ஆயாக்களை நியமனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்

  • மாணவர் சேர்க்கையில்  சாதனை செய்யும் பள்ளிகளுக்குப் துறையின் சார்பில் பாராட்டுக் கேடயமும், பள்ளி வளர்ச்சிக்கு ஊக்கத்தொகையும் வழங்கிட வேண்டும்.

  • பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கமும், கல்வித் தகுதி நீக்கமும் செய்ய வகை செய்ய வேண்டும்.

  • நடத்தைக் கோளாறுகளுக்கு ஆளாகும் மாணவர்களை *உளவியல் ஆலோசனைக்கு அனுப்பிடவும் வகை செய்யும் அறிவிப்பு வேண்டும்

  • அரசு உதவிபெறும்  பள்ளிகளில் உள்ள உபரிப் பணியிடங்களை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்த்துக்கொள்ள வகை செய்ய வேண்டும்

  • இனிவரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களில் தொகுப்பூதியம் என்பதே இருக்கக் கூடாது என்னும் நிலை வேண்டும்.
    ஒரே பணிக்கு இரு ஊதியம் என்பது மனச்சோர்வை அளிக்கும்.

  • ஆண்டிற்கு நான்கு சீருடைகள் வழங்குவதற்குப் பதிலாக தரமான இரண்டு சீருடைகள் வழங்கிட வகை செய்ய வேண்டும்.

  • TET தகுதித் தேர்வில் முன்னரே  தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிக்கான நேர்காணலில் கூடுதலாக 5 மதிப்பெண்களை வழங்கிட வகை செய்ய வேண்டும்.

  • அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் ஒரு கணினி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்

  • நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் அமைப்பை ஏற்படுத்தி பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வகை செய்தல்

  • ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் தனி நூலகர்களை நியமனம் செய்தல் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தல்

  • மேற்கண்ட கோரிக்கைகளில் நிதிசாராத திட்டங்களும் அதிகம் உண்டு


அவற்றைத் தாங்கள் பரிசீலனை செய்யும்படி கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் கூறியுள்ளார்.