நடப்புக் கல்வி ஆண்டில் அரசுக் கல்லூரிகளில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 16) ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். 


இக்கூட்டத்தில் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள், புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள், மாநில கல்விக் கொள்கை உருவாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:


"நம் அரசு கலைக் கல்லூரிகளில் 25% கூடுதலாக இடம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக மொத்தம் 1,53,323 இடங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 1,31,173 இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 20,000 இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும், சில பாடங்களுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் பற்றாக்குறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுக் கூட்டம் என்பதால் கல்லூரி முதல்வர்களும் சில கருத்துகளை முன் வைத்துள்ளனர்.




4000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரிய தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பபட உள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.  1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும் ஆணை வெளியிடப்படும்.


நவம்பர் 23-ம் தேதி 23-ம் தேதி துணைவேந்தர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. 8 பிரிவுகளின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தகுதியுள்ள பேராசிரியர்களை நியமிக்க குழு அமைத்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.


மாணவிகளுக்கு சுழற்சி முறையில் காலை, மாலை என இரு வேளை கல்லூரிகளைக் கொண்டு வந்ததே நாங்கள்தான். கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்த முறை கொண்டு வரப்பட்டது. அதனால் கிராமப் புறம் உள்ளிட்ட பெண்களின் கல்வி அறிவு உயர்ந்துள்ளது. மாணவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். 


அரசு கலை கல்லூரிகளில் நவீன ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம்.


அரசுக் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் முதலாம் ஆண்டு சேர்ந்த  மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு, ஆண்டு இறுதியில் தாமதமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்தும்  இந்த கூட்டத்தில் ஆலோசித்துள்ளோம்.


கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகளில் 7 கல்லூரிகளுக்கும் நாங்கள் நிதி ஒதுக்கி கட்டிடங்களைக் கட்டி வருகிறோம்."


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.