தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வட மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தமிழ் பாடத்தில் 94 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Continues below advertisement

சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில், வழக்கப்போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களும் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

இந்த நிலையில், சென்னை அருகே பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வட மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தமிழ் பாடத்தில் 94 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். 

Continues below advertisement

 

பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீர் பாண்டே(41). இவரது மனைவி குஷ்புதேவி (38). இவர்களுக்கு சௌரப் குமார்(15) என்ற மகனும், ஸ்நேஹா(14), நேஹா(13) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் சுதீர் பாண்டேவின் மூத்த மகன் சௌரப் குமார், 5-ஆம் வகுப்பு வரை பீகாரில் ஹிந்தி மொழியில் படித்த நிலையில், அத்திப்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பும், ஆவடியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்த நிலையில், நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார். தமிழ் பாடத்தில் 100-க்கு 94 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தாய், தந்தை ஆகியோர் இன்னும் தமிழ் கற்றுக்கொள்ளாத நிலையில், தமிழை சரளமாக பேசும் இவர், தமது சகோதரிகளுக்கும் தமிழ் கற்று கொடுத்து அவர்களும் தமிழில் நன்றாகவே பேசுகின்றனர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தமிழில் சாதனை படைத்த மாணவர்,  ஏபிபி நாடு-க்கு அளித்த பேட்டியில், இன்னும் தமிழில் பல பட்டங்களை பெற வேண்டும் என்பதும், சட்டம் பயின்று அனைவருக்கும் நீதி கிடைக்க பாடுபடுவேன் எனவும், இனிமையான மொழி தமிழ் எனவும் தமிழ் கற்று கொண்ட பின்பு தான் மற்ற மொழிகள் இதிலிருந்து தோன்றி இருக்குமோ என தோன்றுவதாகவும் கூறுகிறார். சாதிப்பதற்கு மொழி ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார் இந்த வடமாநில மாணவர்.