வெளிநாட்டில் கணவன்.. காதலன் வீட்டில் மனைவி - ஆதரவு இன்றி தவித்த குழந்தைகள் - நடுரோட்டில் பயங்கரம்
Affair Murder: மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை நடுரோட்டிலேயே கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.

Affair Murder: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் திருமணத்தை மீறிய தகாத உறவாக உருவெடுத்து, கொலையில் முடிந்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவால் கொலை
தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா மாவட்டத்தின் தலைமையகத்தில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார். திருமணத்தை மீறிய உறவு காரணமாக இந்த கொடூர கொலை அரங்கேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல, பிரதான குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆள்நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாவால் வந்த விபரீதம்
போரண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவருக்கு அதே மாவட்டத்தில் உள்ள அந்தர்கான் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன், இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில், விஸ்வநாத் உடனான நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இனி அவருடன் தான் சேர்ந்து வாழ விரும்புவதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பாக, ஜக்தியாலா நகரில் நெடுஞ்சாலை பகுதிக்கு அருகே ஒரு அறையை வாடகைக்கு எடுத்த விஸ்வநாத், அந்த பெண்ணுடன் தனியாக வாழ தொடங்கியுள்ளார்.

தவித்த குழந்தைகள்.. நாடு திரும்பிய கணவன்..
குழந்தைகள் ஆதரவின்றி தனியாக தவித்து வருவது குறித்து தகவலறிந்த அந்த பெண்ணின் கணவன், அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் தன்னுடன் வாழ வரும்படி, மனைவியை அழைத்து வீட்டு பெரியோர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், இனி நான் அந்த வீட்டிற்கு வரமாட்டேன், விஸ்வநாத் உடன் வாழவே விரும்புவதாக உறுதிபட தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதையும், தாய் இல்லாமல் சிரமப்படுவதையும் கண்டு கணவன் ஆத்திரமடைந்துள்ளார்.
நடுரோட்டில் படுகொலை..
இந்நிலையில் தான், சிவராத்திரியை ஒட்டி விஸ்வநாத் தனது காதலியுடன் உள்ளூரில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றிற்கு சென்று பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜக்தியால் பகுதியில் அவரை இடைமறித்த இரண்டு பேர், கைகளில் இருந்த உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவர் அங்கே நின்றிருந்து, “இவள் என்னுடைய மனைவி, என்னையும் எனது குழந்தைகளை கைவிட்டுவிட்டு இவனுடன் வசித்து வருகிறாள். அதன் காரணமாகவே இந்த கொலையை செய்தேன்” என கத்தியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.























