பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திருப்பி வராததால் கடன் தொல்லை ஏற்பட்டதால் காஞ்சிபுரத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு


காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி,கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஐ.எஃப்.எஸ் , ஆருத்ரா நிதி நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்ததாக கூறகூறப்படுகிறு. மேலும் பல பேரிடம் கடனாக தொகையை பெற்று முதலீடு செய்திருந்த நிலையில், நிதி நிறுவனங்களில் இருந்து பணம் ஏதும் திரும்பி வராததால் பெரும் சிரமம் அடைந்து உள்ளார்.




போலீசார் தீவிர விசாரணை


மேலும் கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நச்சரிக்க தொடங்கவே கடன் தொல்லை அதிகமான காரணத்தால், மனம் உடைந்த ராஜி தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ராஜிக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனாகப் பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம்  திரும்பி வராமல் போனதால்,  கடன் தொல்லை அதிகமாகி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காமராஜ் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடரும் தற்கொலை சம்பவங்கள்


கடந்த இரண்டு ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் பல்வேறு நிதி நிறுவனங்கள் , நூதன முறையில்  டிரேடிங் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வார்த்தைகளை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாயை ஏமாற்றினார். இதன் காரணமாக, அதில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்பொழுது, இது போன்ற நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள், முகவர்கள் உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி உள்ளது. மக்கள் பணத்தை ஏமாற்றிய நிறுவனங்களின் பல   நிறுவனர்கள் வெளிநாட்டில் தலைமறியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. விரைந்து இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதே ஏமாந்த பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது .




Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)