பூட்டி இருந்த வீட்டை உடைக்காமல்

 

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி (வயது-37) மாலதி (வயது-31) தம்பதியர். சபாபதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சபாபதி காலையில் வேலைக்குச் சென்றுள்ளார். அதேபோல் அவரது மனைவி மாலதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.  மாலதி மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த பணம் மற்றும் 3 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போனது தெரியவந்தது.  பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைக்காமல் நகை பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



 

இளம் பெண் ஒருவர் 

 

கணவன் பணம், நகை எடுத்து இருப்பாரோ என்று நினைத்து அவரிடம் கேட்டபோது அவர் எடுக்கவில்லை என்று கூறியதும் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கங்காரனை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் மாலதி வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது இளம் பெண்மணி ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் மாலதி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரிக்கலாம் என்று எண்ணிய போது வாகனத்தின் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததால், இந்தப் பெண்மணி நகையைத் திருடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

 

சமூக வலைதள பிரபலம்

 

பின்னர் மூன்று நாட்களாக தொடர்ந்து சுமார் 47 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி வரும் அனீஷ் குமாரி (வயது-33) என்ற பெண்மணி தான் நகை திருடியது என்பது தெரிய வந்தது.

 

திருட வேண்டிய அவசியம் இல்லை

 

பின்னர் பெண் காவல்துறை அதிகாரிகளுடன் சென்று அனீஷ் குமாரி வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்வதற்காக வீட்டுக்குள் ரீல்ஸ் செய்து கொண்டிருந்தபோது அவரிடம் சென்று கேட்டனர் . அப்போது நான் எந்த நகையும் பணமும் திருடவில்லை என்றும் ரீல்ஸ் செய்து மாதம் 15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதித்து வருவதாகவும் எனக்கு திருட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் காண்பித்து அவரை போலீசார் பாணியில் விசாரணை செய்தனர்.

 



பத்திரமாக, பிரிட்ஜில் வைத்திருந்த நகை

 

தமிழ்நாடு முழுவதும் சென்று பல பிரபலங்களோடு ரீல்ஸ் செய்து பிரபலமாகி விட்டேன். இதில் கிடைக்கும் வருமானம் உல்லாசமாக இருப்பதற்கு போதுமான பணம் கிடைக்காததால், திருடியாவது உல்லாசமாக இருக்கலாம் என்று எண்ணி பணம் நகை திருடியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் நகை பணம் எங்கே என்று கேட்டபோது பணம் முழுவதும் ஒரு மணி நேரத்தில் செலவு செய்து விட்டதாகவும் நகையை மட்டும் பத்திரமாக ஃப்ரிட்ஜில் வைத்திருப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த நகையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

 

ஏற்கனவே, திருட்டு வழக்கு

 

பின்னர் போலீசார் அவரை கைது செய்து பெருங்களத்தூர் பீர்க்கண்காரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேலும் விசாரணை தொடங்கிய போது, கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பாக சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி ஓ.எல்.எக்ஸ் மூலமாக விற்பனை செய்து அதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தது தெரிய வந்தது. 



நான் ஒரு பிரபலம், என் போட்டோ வெளியே வரக்கூடாது

 

அதன் பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ,சிறைக்கு அழைத்து செல்லும் போது, நான் ஒரு பிரபலம் என்னுடைய புகைப்படத்தை குற்றவாளி என்று தெரிவிக்க வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக்கொண்டார். ரிலீஸ் செய்து கொண்டிருந்த இளம் பெண் தற்போது திருட்டு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.