கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கடலூரில் அதிர்ச்சி...கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக ரூ.26 லட்சம் மோசடி - நாமக்கல் பெண் அதிரடி கைது!

கடலூர்: கிட்னி செயலிழந்த மகனைக் காப்பாற்ற, மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பல தவணைகளாக ரூ.26 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நாமக்கல் பெண்னை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிகிச்சைக்கான பணம் கையை விட்டுப் போன நிலையில், உரியச் சிகிச்சை கிடைக்காமல் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி பூங்காவனம் (55). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் குபேந்திரன் (25) என்பவருக்கு திடீரென இரண்டு கிட்னிகளும் (சிறுநீரகம்) கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குபேந்திரனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடியாக டயாலிசிஸ் அல்லது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கூலி வேலை செய்யும் ஏழைக் குடும்பம் என்றாலும், மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பூங்காவனம் பல்வேறு வழிகளில் பணத்தைத் திரட்ட முயன்றுள்ளார்.
அப்போது பூங்காவனத்தின் உறவினரான சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிமுத்து என்பவர் மூலமாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா (37) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் தமக்குத் தெரிந்த மருத்துவர்கள் இருப்பதாகவும், அங்கு மிக எளிதாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து குபேந்திரனைக் காப்பாற்றி விடலாம் என்றும் பிரியா ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய தாய் பூங்காவனம், தனது மகனின் மருத்துவச் செலவிற்காகப் பல தவணைகளாக மொத்தம் ரூ.26 லட்சம் வரை பிரியாவிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிரியா, கூறியபடி கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் காலங்கடத்தி வந்துள்ளார். உரிய நேரத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படாததன் காரணமாக, பூங்காவனத்தின் மகன் குபேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனைப் பறிகொடுத்துப் பெரும் சோகத்தில் மூழ்கிய பூங்காவனம், தான் கொடுத்த ரூ.26 லட்சம் பணத்தைத் திருப்பித் தருமாறு பிரியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரியா, "இவ்வளவு பெரிய தொகையை என்னால் திருப்பித் தர முடியாது" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, பஞ்சாயத்து பேசி ரூ.15 லட்சத்தைப் பிரியாவும், ரூ.3,50,000 தொகையைக் கட்டிமுத்துவும் தருவதாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி கட்டிமுத்து தனது பங்கை முழுமையாகக் கொடுத்துவிட்டார். ஆனால் பிரியா ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.11 லட்சத்தைத் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூங்காவனம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சில தினங்களுக்கு முன்பு புகார் மனு அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவரின் மனைவி பிரியாவை (37) போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். கடலூர் அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மகனை இழந்து, பணத்தையும் ஏமாந்த கூலித் தொழிலாளியின் புகார் மீது போலீசார் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்





















