அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்.. பின்னணியில் பெரும் சதி? - சிக்கிய பெண் பரபரப்பு வாக்குமூலம்!
திருச்சி மாவட்டம் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில் சிக்கிய பெண் மிகப்பெரிய மோசடியை கையாண்டுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை திருடப்பட்ட சம்பவத்தில் சிக்கிய பெண் மிகப்பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியிருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுகன்யா இரண்டாவது பிரசவத்திற்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சுகன்யாவை பார்த்துக் கொள்ள அவரது உறவுக்கார பெண் பிரேமா இருந்துள்ளார். அப்போது அவரின் பக்கத்து படுக்கையில் மீனாட்சி என்ற பெண் தான் 7 மாத கர்ப்பம் என சொல்லி ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக சிகிச்சைப் பெற்று வருவதாக சொல்லி நட்பாகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை சுகன்யாவின் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு வருவதாக கூறி குழந்தையை வாங்கிச் சென்ற மீனாட்சி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முழுக்க உஷார்படுத்தப்பட்டது.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மீனாட்சி குழந்தையை தூக்கிக் கொண்டு ஆட்டோ மூலம் அங்கிருந்து சென்றது தெரிய வந்தது. அதேசமயம் அவர் கொண்டு வந்த கட்டை பையை மறந்து மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றிருந்தார். போலீசார் அதனை சோதனையிட்டபோது அதில் மீனாட்சியின் ஆதார் கார்டு இருந்தது. அதில் இருந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதேசமயம் மீனாட்சியின் செல்போன் எண் மூலம் அவரின் இருப்பிடமும் கண்டறியப்பட்டது. அதனையடுத்து காணாமல் போன குழந்தை அவரிடம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீனாட்சியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, “மீனாட்சிக்கு திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாததால் அந்த ஏக்கத்தில் இப்படி ஒரு சம்பவத்தை செய்து விட்டேன்” என தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இதனை போலீசார் நம்ப மறுத்து துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மை தெரிய வந்தது.
மீனாட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் என்பவரை முதலாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஆண்,பெண் என இரு குழந்தைகள் பிறந்தனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சரவணனை விட்டு மீனாட்சி பிரிந்தார். இரு குழந்தைகளையும் திருச்சியில் இருந்த தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, காட்டூரைச் சேர்ந்த விஜய் என்பவரை இரண்டாவதாக மீனாட்சி திருமணம் செய்துள்ளார்.
இந்த உறவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 3வதாக ராம் என்பவரை அவர் திருமணம் செய்ய அடுத்த சில ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டார். நான்காவதாக தற்போது சுரேஷ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். மாமியார் தன் மீது பாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பமாக இருப்பதாக கூறி மீனாட்சி ஏமாற்றியுள்ளார். வயிற்றில் துணியைக் கட்டி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றியிருக்கிறார். வளைகாப்பும் நடைபெற்றுள்ளது.
பிரசவ தேதி நெருங்கியதாக காட்டிக் கொண்ட மீனாட்சி திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக நோயாளி போல வலம் வந்துள்ளார். சனிக்கிழமை அதிகாலை குழந்தையை திருடி விட்டு நேராக தனது தாயிடம் சென்று ஆசி வாங்கி விட்டு மாமியாரை சந்திக்க கார் மூலம் தம்மம்பட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் தான் மீனாட்சி போலீசாரின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரின் கணவர் சுரேஷ் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் 5 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.





















