Crime: சந்தேகத்தால் லிவ்இன் பார்ட்னரை, பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. சந்தேகம் காரணமாக பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆண்களும் சந்தேகத்தில் பாதிக்கப்படுவதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.


சந்தேகத்தால் வெறிச்செயல்:


கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேணுகா (24). இவர் பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 வருடங்களாக பெங்களூருவில் இருக்கும் ரேணுகாவுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிகிறது.  ரேணுகாவுக்கு அதே பகுதியில் வேலை பார்த்து வந்த ஜாவத் (29) என்ற நபரை காதலித்து வந்துள்ளார். ஜாவத்தின் சொந்த ஊரரான கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து வேலைக்கு வந்திருந்தார். ஜாவத் செல்போன் பழுது பார்க்கும் வேலையை செய்து வந்திருந்தார்.


இவர்கள் பப்பில் சந்தித்து காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து இவர்கள் இரண்டு பேரும் தங்கி இருந்தனர். இந்நிலையில், ஜாவத் வேறொரு பெண்ணுடன் நட்பாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா அவரிடம் இதை பற்றி கேட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்திருந்தார். இதனை பற்றி அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில், சம்பவத்தன்று ஜாவத்துக்கு அவரது தோழி போன் செய்துள்ளார். 


லிவ் இன் பார்ட்னரை கொன்ற பெண்:


இதனை அறிந்த ரேணுகா, ஜாவத்திடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கும் வாதம் நீடித்த நிலையில், அருகில் கிடந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் மார்பில் பலமுறை குத்தியுள்ளார்.  ஜாவத்தை குத்திவிட்டு, ரேணுகா அவரை மடியில்போட்டு அழுதுயுள்ளார். இதனை அறிந்த  காவலாளி உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜாவத்தை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு ஜாவத்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஜாவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  லிவ்  இன் பார்ட்னரை கொலை செய்த ரேணுகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.