ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் பிச்சைக்கனி. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிச்சைக்கனி பரோட்டா மாஸ்டராக வெளிநாட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிவந்துள்ளார். மே மாதம் 27-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர வீட்டிற்கு திரும்பி வரவில்லை.


இதனால் பிச்சைக்கனி மனைவி சாந்தி தேவிபட்டினம் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். இதுகுறித்து தேவிபட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சாந்தி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவருடைய மொபைல் போனை வாங்கி சோதனை செய்தபோது, அவரது சொந்தக்காரர்களான பார்த்திபன் மற்றும் கலைமோகன் என்ற இருவரிடம் சாந்தி அதிகமாக பேசியிருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் தேவிபட்டினம் அருகில் உள்ள சீனங்குடி கிராமத்தில் இருக்கும் கலை மோகன்(26) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.




இதில் பிச்சைக்கனி மனைவி சாந்திக்கு, அவரது உறவினர்களான பார்த்திபன் மற்றும் கலை மோகன் ஆகிய இருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததால் அவர் இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்ற எண்ணத்தில் சாந்தி கலைமோகனிடம் அவரது கணவரை கொலை செய்து விடுமாறு கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து கலைமோகன் மற்றும் பார்த்திபன் இருவரும் பிச்சைக்கனியை குடிக்க வைத்துள்ளனர். போதையில் இருந்த பிச்சைக்கனியை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி அரசலூர் அருகில் இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி மட்டதியில் உடலை வீசியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக கலை மோகனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சாந்தி தலைமறைவாகி விட்டார், பார்த்திபன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார்.




இந்நிலையில், சாந்தி ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை பகுதியில் இருந்து மதுரை சென்று அங்கிருந்து விமானத்தில் அந்தமான் தப்ப முயல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மதுரை விமான நிலையத்தில் வைத்து சாந்தியை கைது செய்தனர். ராமநாதபுரம் அழைத்து வரப்பட்ட அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மலேசியா தப்பி சென்ற பார்த்திபனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விமான நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.