கர்நாடகாவில் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் கணவன், பிற பெண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தை மனைவியே வெட்ட வெளிச்சமாக்கி மாட்டி விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணீஷ் என்ற இளைஞர் மீது மங்களூரு மகளிர் காவல் நிலையத்தில் மனைவி பிரீத்தி புகார் அளித்துள்ளார். 

Continues below advertisement

சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சி எது வேண்டுமென்றாலும் நம்மை தேடி வரும் அளவுக்கு மாறி விட்டது. குறிப்பாக சமீப காலமாக இணையத்தின் வழியாக நடைபெறும் திருமணம் மோசடி என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இது ஒருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்ற நிலையில், இதில் ஆண் பெண் பேதமில்லாமல் குற்றம் செய்து வருகின்றனர். அதீத பணம், நகை உள்ளிட்ட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த மோசடியானது நடைபெறுகிறது. இப்படியான நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற சம்பவம் பற்றிக் காணலாம். 

ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனிஷ் என்பவர் பேஸ்புக் மூலம் பிரீத்திக்கு பழக்கமாகியுள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச தொடங்கிய இவர்கள் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கியதாகவும், மனிஷ் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என பிரீத்தியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. வேறு வழியின்றி பிரீத்தி இதற்கு சம்மதிக்க திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுள்ளது. சரியாக திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மனிஷ் வருங்கால மனைவியை தொடர்பு கொண்டு தன்னிடம் பணம் இல்லாததால் திருமணம் நடைபெறுமா என்ற நிலை உள்ளது. அதனால் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என சொல்லியுள்ளார். 

Continues below advertisement

இதனால் பயந்து போன பிரீத்தி மற்றும் அவரது பெற்றோர் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் கவனித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அதன்பின் மனிஷ் கையில் ரூ.2 லட்சம் கொடுத்து வெளிநாட்டில் வேலை பெறவும் உதவியுள்ளனர். இந்த நிலையில் துபாய் சென்ற மனிஷ் அங்கு பஹ்ரைனில் உள்ள ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார். 

ஒருகட்டத்தில் பிரீத்திக்கு மனிஷ் நடவடிக்கை தொடர்பான உண்மை தெரிய வருகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர் மனிஷை தொடர்ந்து கண்காணித்ததில் அவரைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது பிரீத்தியை திருமணம் செய்வதற்கு முன்பு பல இளம் பெண்களுடன்  மனிஷூக்கு காதல் இருந்துள்ளது. அந்த பெண்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய மனிஷ், அதே ஃபார்முலாவை பிரீத்தியிடமும் பின்பற்றியுள்ளார். 

இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பணத்தை திரும்ப கேட்டபோது தனக்கு மூளைக் கட்டி இருப்பதாக நாடகமாடி பணம் கொடுக்காமல் அவர்களை விட்டு பிரிந்துள்ளார். இந்த நிலையில் மனிஷின் உண்மையான முகத்தை வெளிக்காட்ட முடிவு செய்தார். அதன்படி இனியும் யாரும் அவரால் ஏமாறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர் நேராக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மனிஷ் ஏமாற்றிய பெண்களுடனான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.