தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடையில் உடலை தகனம் செய்வதில் இரு தரப்பினர் இடையே மோதல் மூன்று பேருக்கு காயம்.. பரபரப்பு..


சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயலும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது




தூத்துக்குடி திருநெல்வேலி சாலையில் எம்ஜிஆர் பூங்கா அருகே அமைந்துள்ளது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகனமேடை. இன்று மாலை இந்த தகனம் மேடைக்கு தகனம் செய்வதற்காக தூத்துக்குடி பாரதி நகர் பகுதியை சேர்ந்த இசக்கி ராணி என்ற பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர். அப்போது அண்ணா நகர் 12வது தெரு பகுதியைச் சேர்ந்த விபத்தில் இறந்த அய்யாதுரை என்பவரது உடலை அவரது உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர்.




இந்நிலையில் யார் உடலை முதலில் தகனம் செய்ய வேண்டும் என்பதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முதலில் வாய் தகராறு ஆக ஏற்பட்ட இந்த தகராறு பின்னர் அடிதடியில் முடிந்தது இதில் மூன்று பேருக்கு தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது.




இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் இரு தரப்பையும் பிரித்து  ஒரு தரப்பினரை தகன மேடையில் இருந்து வெளியேற்றினர்.  வெளியே வந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் குண்டுகட்டாக அவர்களை சாலையில் இருந்து அகற்றினர்.  




அப்போது காவல்துறையினர் மற்றும் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் காயம் அடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடியில் தகன மேடையில் உடலை தகனம் செய்வதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.