திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள கடலாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சற்றுவட்டார பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். மேலும் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை எடுத்து  வருகின்றனர்.  இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர் பணிபுரிந்து வருகிறார். பின்னர்  இந்த  பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். 


இந்நிலையில்  இவருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே பல மாதங்களாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


 






 


நேற்று  அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே ஏற்பட்ட பிரச்னை  வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து கொண்டும் கீழே விழுந்தும் தாக்கி கொண்டனர். பின்னர் அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து  நிறுத்தி சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து  இருவரும் தாக்கிக்  கொண்டதை   யாரோ  அவர்களுடைய தொலைபேசியில்  வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


 


 






 


 




மேலும் இச்சம்பவம்  குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் பேசிய போது, “ஆசிரியர்கள் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து போளூர் கல்வி மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கல்வி மாவட்ட அதிகாரி விசாரணை அறிக்கையை எங்களிடம்  சமர்ப்பித்த பின்னரே எதற்காக அவர்கள் தாக்கி கொண்டனர் என்பது தெரியவரும். அவர்களில் யார்  மீது தவறு  என்பது தெரியவந்தபிறகே   நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


இந்நிலையில் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார் பின்னர் விசாரணை தொடர்பானா அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வத்திடம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் சட்டையை பிடித்து மோதலில் ஈடுப்பட்டு ஒழுங்கினமாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் மாற்று திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய மூன்று நபர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளியில் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.