காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு முனுசாமி முதலியார் அவின்யு ஏ கே ஜி திருமண மண்டபம் எதிரில் மாற்றுத்திறனாளி ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் , சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஷ்ணுகாஞ்சி போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தைப் கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.



போலீசாரின் தீவிர விசாரணையில், இறந்து கிடந்தவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த, மாற்றுத்திறனாளி குமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ரங்கசாமி குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் நாராயண் என்பவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மாற்றுத்திறனாளி , குமார் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது குடிபோதை தகராறு என் காரணமாக கொல்லப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இருந்த திருமண மண்டபத்தின் வாசலில் மாற்றுத்திறனாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபொழுது, முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளோம், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு அதில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.