விழுப்புரம்: இன்ஸ்டாகிராமை பயன்படுத்திய போது, பகுதிநேர பணி என்ற விளம்பரத்தை நம்பி விழுப்புரத்தில் பெண் துணை பேராசிரியர் ஒருவர் ஆன்லைனில் ரூ.9.83 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.

Continues below advertisement

ஆன்லைன் மோசடியில் சிக்கிய பெண் துணை பேராசிரியர்

விழுப்புரம், வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் விஜயபதி மகள் சரண்யா,34; தனியார் கல்லுாரி துணை பேராசிரியர். இவர் தனது மொபைலில் கடந்த 26 ஆம் தேதி இன்ஸ்டாகிராமை பயன்படுத்திய போது, பகுதிநேர பணி என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த லிங்கை தொட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர் ஒருவர் அவர் அனுப்பும் வீடியோவை 'லைக்' செய்து அதை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து அனுப்பினால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என கூறினார்.

இதை நம்பிய சரண்யா, அந்த மர்ம நபர் கூறியபடி செய்து ரூ.120 பெற்றார். தொடர்ந்து மர்ம நபர், சரண்யாவிற்கு ஒரு லிங்க்கை அனுப்பி சிறிய தொகையை முதலீடு செய்து 'டாஸ்க்' முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார். இதையடுத்து, அவர் தனக்கென யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை உருவாக்கி, மர்ம நபர் அனுப்பிய லிங்க்கிற்குள் சென்று ரூ.700 முதலீடு செய்து ரூ.910; ரூ.3 ஆயிரம் முதலீடு செய்து ரூ.4,800; திரும்ப பெற்றார்.

Continues below advertisement

இதை நம்பியவர் தனது வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட 'Gpay ' மூலம் மர்ம நபர் கூறிய UPI., ஐ.டி.,களுக்கு, கடந்த 26 ம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை 16 தவணைகளில் மொத்தம் 9 லட்சத்து 83 ஆயிரத்து 130 ரூபாய் அனுப்பி டாஸ்க்கை முடித்தார். இதையடுத்து சரண்யாவிற்கு சேர வேண்டிய தொகையை தராமல் மர்ம நபர்கள் ஏமாற்றி வந்தனர். அப்போது அவருக்கு பணத்தை இழந்தது தெரிந்தது. இது குறித்து சரண்யா நேற்று விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதி நேர வேலை என கூறி மோசடி

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகுதி நேர வேலை, முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி இருவரிடம், 13.71 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், திம்மேநத்தத்தை சேர்ந்தவர் முரளி, 28; தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் பக்கத்திற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்கலாம். அனுப்பும் லிங்க் கை 'கிளிக்' செய்து பதிலளித்தால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் தெரிவித்திருந்தது. கிளிக் செய்து சிறிது பணம் பெற்றார்.

மேலும் அவர்கள் அடுத்து அனுப்பிய மெசேஜில் பகுதி நேர வேலையுடன், பண முதலீடு செய்தால் முதலீட்டு தொகையுடன் லாபம் மற்றும் ஊதியம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில், 8.71 லட்சம் ரூபாய் அனுப்பினார். அதன் பின் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இதேபோல் ஓசூர், மத்திகிரி ரூபிதா, 39, டெலிகிராம் பக்கத்தில் VVIP  குழுவில் இணைந்தார். அதில் முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பிய அவர், 5 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். இருவரின் புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.