விழுப்புரம்: விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம், சிறுவாளை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். தனக்குச் சாதகமாக அந்தப் பெண்ணிடம் "உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைப் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பாலாஜியிடம் கேட்டபோது, அவர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியுள்ளார்.

போலீசார் நடவடிக்கை மற்றும் கைது:

பாலாஜியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், கடந்த 2018-ஆம் ஆண்டு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், மகளிர் காவல் நிலைய போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு:

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் (மகளிர் நீதிமன்றம்) கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி இன்று இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில், இளம்பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பாலாஜிக்கு: 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 5,000/- (ஐந்தாயிரம் ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காதல் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றிய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.