விழுப்புரம்: விழுப்புரத்தில் பணத்திற்காக தொழிலதிபரை காரில் கடத்திய கும்பலை சினிமா பாணியில் போலீசார் துரத்தியதால் தவறான திசையில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்று சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி விட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது குறித்து விழுப்புரம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
தொழிலதிபரை காரில் கடத்திய கும்பல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வளத்தியைச் சேர்ந்த சிவா என்பவர் மதுரையில் மணல் குவாரி டெண்டர் எடுத்து 20 வருடங்களுக்கு மேலாக மதுரையில் வசித்து வருகிறார். சிவா இரண்டு தினங்களுக்கு முன் மதுரை பகுதியில் பாஜகவில் பொறுப்பு வழங்க வேண்டுமென கேட்டபொழுது விழுப்புரத்திற்கு பொறுப்பு தருவதாக கூறியுள்ளனர். அதனை ஏற்காமல் சிவா மீண்டும் சொந்த ஊரான வளத்திற்கு வருகை தந்துள்ளார்.
பின்னர் அதிகாலை நேரத்தில் சிவா வீட்டிற்கு காரில் சென்ற மர்ம கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறபடுகிறது. அதற்கு சிவா பணம் தர முடியாது என மறுத்ததால் சிவாவை அந்த கும்பல் காரில் கட்டிபோட்டி கத்தி முனையில் கடத்தி கொண்டு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து சிவாவின் மனைவி வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் கடத்தல் வாகனத்தை பின் தொடர்ந்து வரவே விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிற்கு வந்த காரானது எதிர் திசையில் சென்று இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளி விபத்து ஏற்படுத்தி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போதும் போலீசார் விடாமல் துரத்தி சென்றதால் மர்ம கும்பல் வழுதரெட்டி பகுதியில் காரினை நிறுத்திவிட்டு தப்பித்து ஓடியது.
அதன் பின்னர் போலீசார் காரினை கைபற்றிய போது காருக்குள் கைககள் கட்டப்பட்ட நிலையில் காரின் இருக்கையில் காயங்களுடன் இருந்த சிவாவை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து கார் எண்ணை கொண்டு பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரனை செய்து வருகின்றனர். கடத்தல் கும்பல் ஓட்டி சென்ற கார் மோதியதில் 6 இருச்சக்கர வாகனங்கள் சேதமடைந்தது. அதனை ஓட்டி சென்றவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விழுப்புரத்தில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.