வேலூர் மாநகருக்குட்பட்ட சத்துவாச்சாரி அன்னை தெரெசா 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின்(60). ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரான இவர், சத்துவாச்சாரியில் உள்ள IOB வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அதை ஒரு லெதர் பையில் போட்டு தனது ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், அங்கு சித்த மருத்துவ மையத்தில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பணப்பையை ஸ்கூட்டரின் சீட்டிற்கு அடியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். அவர் வங்கியில் வெளியேறியதில் இருந்து நோட்டமிட்ட கும்பல் ஒன்று, இவை அனைத்தையும் கவனித்து வந்தது. இரண்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அந்த 4 பேர்  கும்பல், அகஸ்டின் உள்ளே சென்றதும் ஸ்கூட்டரின் பின் பகுதியை கள்ளச்சாவி போட்டு திறந்து அதிலிருந்த பணம்பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.




தற்செயலாக இதனை கண்ட அகஸ்டின் கூச்சலிட்டு அலறி "திருடன் பிடிங்க பிடிங்க" என கத்தியுள்ளார். பொது மக்கள் யாரும் வழிப்பறி குப்பலை பிடிக்க முயற்சிக்காத நிலையில்,  வழிப்பறி கும்பல் ஆட்சியர் அலுவலக கேட்டை தாண்டியுள்ளனர். அப்போது அகஸ்டினின் அலறல் சத்தத்தை கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த ஜீவிதா என்ற பெண் காவலர் உடனே அந்த வழிப்பறி கும்பலை விரட்டிச்சென்று பிடிக்க முயற்சித்துள்ளார். பெண் காவலர் விரட்டுவதை கண்ட வழிப்பறி கும்பல் பணப்பையை போட்டுவிட்டு இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். மேலும் ஓடும் போது ஒரு செல்போனையும் தவறவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து பெண் காவலர் ஜீவிதா பணப்பையை மீட்டு அகஸ்டியனிடம் கொடுத்துள்ளார். மேலும் வழிப்பறி கும்பல் விட்டுச்சென்ற செல்போனை காவல் துறையில் ஓப்படைத்துள்ளார்.



 


இது குறித்து அகஸ்டின் கூறுகையில், நான் வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும் போது யாரும் என்னை பின் தொடர்ந்ததாக நான் பார்க்கவில்லை. மேலும் எனது இருசக்கர வாகனத்தை பூட்டிவிட்டுத்தான் சென்றேன் எப்படி இதை திறந்து பணம் எடுத்தார்கள் என தெரியவில்லை. நான் கூச்சலிட்டு அலறிய போதும் யாருமே அவர்களை பிடிக்க முன்வரவில்லை. அந்த பெண் காவலர் தான் விரட்டிச்சென்றார். அவருக்கு எனது நன்றி என கூறினார். பணம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் அகஸ்டின் இருந்தாலும், சிறுது நேரத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை.




இச்சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் தவறவிட்டுச்சென்ற செல்போனை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு தைரியமாக வழிப்பறி கும்பலை விரட்டிச்சென்ற பெண் காவலர் ஜீவிதாவுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே 4 பேர் கொண்ட கும்பல் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.