உத்தரப்பிரதேசத்தில் சமூக வலைத்தளம் மூலம் பழகிய ஆசிரியை மூன்று மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சமூக வலைத்தளம் எந்த அளவிற்கு யாரென்று தெரியாத ஒருவரை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு மிகவும் ஆபத்தானதாகவும் இருந்து வருகிறது. இணையதளம், சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு இடங்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்ட மருத்துவர் மற்றும் அவரது நண்பர்களால் ஒரு ஆசிரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி என்கிற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் அதே பகுதியில் பள்ளி ஆசிரியராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளம் மூலம்  மருத்துவர் சித்தார்த் அறிமுகமாகியுள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழக, நாளடைவில் இவர்களது பழக்கம் மொபைல் எண்களை பரிமாறி கொண்டு பேசும் அளவிற்கு உயர்ந்துள்ளது. 


தொடர்ந்து, இவர்களது பழக்கம் நெருக்கமாக மாற, ஒரு கட்டத்தில் அந்த மருத்துவர் ஆசிரியையிடம் தங்களை காதலிப்பதாக கூறியுள்ளார். முதலில் மறுத்த அந்த ஆசிரியை பின்பு தானும் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இருவரும் அவ்வபோது நேரில் பேசியும் பழகியும் வந்துள்ளனர். 


இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி அந்த ஆசிரியை மருத்துவர் சித்தார்த்தை சந்திக்க பஸ்திக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சித்தார்த் தான் பணிபுரியும் மருத்துவமனையில் ஆசிரியை அழைத்து சென்று, யாரும் இல்லாதபோது கட்டாயப்படுத்தி பாலியன் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மருத்துவர் தனது மற்ற இரண்டு நண்பர்களை அழைத்ததாகவும், அவர்களும் அந்த பெண்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


இதையடுத்து, அந்த ஆசிரியை இந்த சம்பவம் தொடர்பாக  மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெண், பஸ்தியில் இருந்து லக்னோவுக்கு வந்து, செப்டம்பர் 27ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


 IPC பிரிவுகள் 376-D, கும்பல் பலாத்காரம், 504 அவமதிப்பு மற்றும் 506 குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு, டாக்டரை கைது செய்ததாகவும், சித்தார்த்தின் நண்பர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததாக தெரிவித்தனர்.


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "அந்த பெண் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​மருத்துவர் அவளை தனது விடுதி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரும் மருத்துவர்களான அவரது இரண்டு நண்பர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்” என்று புகார்தாரரை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தனர்.