Just In





அமெரிக்க பெண்ணுக்கு ஆபாச வீடியோ... திருச்சி வாலிபர் கைது: அதிர வைக்கும் பின்னணி?
ஜப்பான் நாட்டில் வேலை செய்வதற்காக ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அதுவும் அரைகுறைதான். பயிற்சி வகுப்புக்கு பாதியிலேயே டாட்டா காட்டிவிட்டார்.

திருச்சி பட்டதாரி இளைஞரை தட்டித் தூக்கி உள்ளனர் சென்னை சைபர் க்ரைம் போலீசார். எதற்காக தெரியுங்களா?
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆன்லைன் மூலம் ஆபாசக் கடிதம் வந்தபடியே இருந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவை சேர்ந்த அந்த பெண் இதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இதை தனக்கு சாதகமாக நினைத்துக் கொண்ட அந்த மர்மநபரின் அத்துமீறல் அதிகரித்தது. தொடர்ந்து ஆபாச கடிதங்களில் வார்த்தைகள் எல்லை மீறி செல்ல அந்த பெண், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பினார்.
அத்துடன் அவருக்கு ‘இ-மெயில்’, ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மூலம் அனுப்பப்பட்டிருந்த மிரட்டல் பதிவுகள், ஆபாச பதிவுகளையும் இணைத்து புகார் செய்திருந்தார். இதுகுறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள `சைபர் க்ரைம்' போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.
முதல்கட்டமாக அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்த ஆன்லைன் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் அமெரிக்கா பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது திருச்சியைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் (37) என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து சைபர் க்ரைம் போலீஸார் திருச்சிக்கு வந்து இறங்கினர்.
பின்னர் அதிகாலை 3 மணியளவில் கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் வீட்டிற்கு சென்று அவரை எழுப்பி கைது செய்தனர். அதுமட்டுமா? அவர் பயன்படுத்திய செல்போன், ஐபேட், லேப்டாப் ஆகியவற்றையும் சென்னை சைபர் க்ரைம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் பல திடுக் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகத்துக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. எனவே, கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் கம்யூட்டர் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். பின்னர் ஜப்பான் நாட்டில் வேலை செய்வதற்காக ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அதுவும் அரைகுறைதான். பயிற்சி வகுப்புக்கு பாதியிலேயே டாட்டா காட்டிவிட்டார்.
சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை அதிகளவில் பார்த்து அதற்கு ஒருகட்டத்தில் அடிமையாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் தலைமை பதவியிலிருக்கும் பெண் ஒருவரின் சமூக வலைதளத்தை கிஃப்ட் ஜேசுபாலன் பாலோ செய்து வந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக அந்த அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ மற்றும் பாலியல் ரீதியான மெசேஜை அனுப்பி வந்திருக்கிறார். அதை நிராகரித்து வந்த பெண் அதிகாரி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த அவர், அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் எங்களுக்கு புகார் வந்தது. ஐபி அட்ரஸ் மூலம் கிஃப்ட் ஜேசுபாலனைக் கைது செய்திருக்கிறோம்.
இதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பலருக்கும் இவர் ஆபாச மெயில் மற்றும் மிரட்டல் அனுப்பி இருக்கலாம் என்று நினைக்கிறோம். இதுவரையில் யாரும் புகார் அளிக்காததால் செல்வநாயகத்தின் மிரட்டல் போக்கு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இவர், திருச்சியில் இருந்தாலும் அமெரிக்காவில் வாழ்வது போன்று வாழ்ந்து வந்துள்ளார். அமெரிக்க நேரப்படி தன்னுடைய செயல்பாடுகளை மாற்றி அமைத்துள்ளார். இரவில் தூங்காமல் அன்னிய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஆன்லைன் மூலம் தொந்தரவு செய்வதை தனது பொழுதுபோக்காக வைத்திருந்துள்ளார்.
இவரது தந்தை, வேளாண்மைத் துறையில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்று கடந்த 2022-ம் ஆண்டு மரணமடைந்துள்ளார். வயதான தாயார் இருக்கிறார். கணவரின் ஓய்வூதியத் தொகையில் இருந்து வேலைக்கு செல்லாத மகன் செல்வநாயகத்தையும் அவர்தான் கவனித்து வந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர் செல்வநாயகம் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.