புதுச்சேரி: ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்ற போலி மொபைல் செயலியில் பணத்தை செலுத்தி ஏமற்ற வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அதுபோன்று, புதுச்சேரியைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் ஏமாந்துள்ளனர்.

ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்

ஆன்லைனில் வந்த சைபர் மோசடி கும்பல் உருவாக்கிய லிங்க் மூலம் மொபைல் செயலிகளில் 3,500 ரூபாய் கட்டணம் செலுத்தினால், 30 நாட்களுக்கு தினசரி 112 ரூபாய் தருகிறோம். 23 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 60 நாட்களுக்கு தினசரி 805 ரூபாய் கொடுக்கிறோம். 28 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 30வது நாளில் தங்கமாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்பன போன்று பல்வேறு ஆசை வார்த்தைகளை நம்பி, பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

பணம் செலுத்திய ஒரு சிலருக்கு மட்டும் 60 நாட்களுக்கு மோசடி கும்பல் சொன்னபடி பணத்தை கொடுத்ததுடன், முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுத்துள்ளனர். இவ்வாறு, மோசடி கும்பல் உருவாக்கிய போலி மொபைல் செயலியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு, நேற்று வரை 20க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அதில், பல்வேறு மொபைல் செயலிகளில் பணத்தை செலுத்திய பின், அந்த மொபைல் செயலியை மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் லிங்க், மொபைல் செயலி மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். தங்கம் தருகிறோம் போன்ற ஆன்லைன் விளம்பரத்தை யாரும் நம்ப வேண்டும். இதுபோன்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். ஆகவே, அதுபோன்ற செயலிகளில் பணத்தை செலுத்தி, தங்களது பணத்தை இழக்க வேண்டாம் என, எச்சரித்துள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.