திருப்பத்தூரில் கணவனால் உயிருக்கு ஆபத்து என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்  அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வி (50) என்பவர் தனது கணவர் ஸ்ரீதர் (60) தன்னையும் தனது மகனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, எனது கணவர் ஸ்ரீதர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு குடும்பத்தை மிரட்டி கொலை செய்து விடுவேன் எனக் கூறியதன் பேரில், கந்திலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 58 நாட்கள் வேலூர் மத்திய  சிறையில் இருந்தார்.

Continues below advertisement

 

பின்னர் ஜாமீனில் வெளியே வந்தபோது அவரது தம்பி வரதராஜன், உன்னை நான்தான் வெளியே எடுத்தேன் உன் மகன் உன்னை சிறையில் வைத்திருக்க பல முயற்சிகள் செய்தான் என்று தவறான தகவலைக் கூறி, என் மகன் மீது என் கணவருக்கு வெறுப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, என் கணவர் என் மகனைப் பற்றி தவறாக எண்ணி, தினமும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் அவரிடம் போடா என்று கூறியதற்காக என்னை சரமாரியாக தாக்கி உதைத்தார்.பின்பு எனது மகன் சரவணன் என்னை அழைத்து  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தார்

தற்போது என்னையும் எனது மகன் சரவணன் (20) என்பவரையும் கொலை செய்து விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார்.இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழு காரணமும் எனது கணவர் ஸ்ரீதரே ஆவார். எனவே, எங்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.