பிட்காயினில் போட்ட பணத்தைக் கேட்ட ஏஜென்ட்கள்! பிட்டு துணியோடு அடித்து துன்புறுத்திய அடியாட்கள்! உயிருக்கு பயந்து விட்டால் போதும் என ஓட்டம்! ரூ.60 கோடி மோசடி செய்த நபர் உட்பட 2 பேர் கைது! திருப்பத்தூர் போலீசார் அதிரடி.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30க்கும் அதிகமான நபர்களிடம் திருப்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2024ம் ஆண்டு பழக்கமாகி உள்ளார்.
மேலும், அவர் கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வர்மா, சந்தோஷ்குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகிய 3 பேரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அப்போது அவர்கள் தென் ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கமும், துபாயில் ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்து உள்ளதாகவும், தங்களது நிறுவனத்தின் மூலம் டாலர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்தால், அதிக அளவில் லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பி அவர்கள் கூறிய, நிறுவன செயலியில் அடையாள அட்டை கணக்கு ஆகியவற்றை உருவாக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் அதிகமான பொது மக்கள் தங்களது வசதிக்கேற்ப பணத்தை முதலீடு செய்தனர்.
மேலும், இந்த திட்டத்தில் மற்ற நபர்களை சேர்த்தால் 5 மடங்கு கமிஷன் கிடைக்கும் எனக்கூறியதை நம்பி அவர்களுக்கு தெரிந்த நபர்களையும், உறவினர்களையும் இதில் முதலீடு செய்ய வைத்துள்ளனர். சில மாதங்கள் அவர்கள் சொன்னபடி கமிஷன் பணத்தை கொடுத்து உள்ளனர். அதன்பிறகு அந்த தனியார் நிறுவன செயலியில் உள்ள பணத்தை இவர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீடு செய்தவர்கள் இதுகுறித்து விசாரித்தபோது கேரளாவை சேர்ந்த வர்மா சந்தோஷ்குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் அவர்களை ஏமாற்றியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் கேரளாவுக்கு சென்று இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். பிட்டு துணியோடு அடியாட்கள் அடித்து துன்புறுத்தியதால் உயிருக்கு பயந்து விட்டால் போதும் என ஓட்டம் பிடித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.20 கோடியும், திருவண்ணாமலை, சேலம், நாகப்பட்டினம், ஆம்பூர், ஆரணி, செங்கம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ரூ.40 கோடி என மொத்தம் ரூ.60 கோடிவரை மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் கடந்த வாரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து எஸ்பி அக்சய் அனில் வாகரே உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருப்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கேரளாவை சேர்ந்த மேற்கண்ட 3 என மொத்தம் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து கடந்த 22ம் தேதி அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (47) கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (46) ஆகிய 2 பேரையும் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதேநேரம் தலைமறைவாக உள்ள கேரளாவைச் சேர்ந்த வர்மா மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
