திருப்பத்தூர்: சொத்துக்காக பெற்ற தாயை கணவனுடன் சேர்ந்து கொன்ற மகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை பகுதியில் உள்ள நடுகுப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து கொடுத்த பிறகு அவரவர் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில், சாம்பசிவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை குறைபாடு காரணமாக இறந்து உள்ளார். இதனால், அவரது மனைவி சின்னகாளி (45) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 

Continues below advertisement

அப்போது அவருக்கு துணையாக அதே பகுதியில் வசிக்கும் அவரது இளைய மகள் கீதா, அவரது கணவர் சிதம்பரம் மற்றும் இரண்டு பிள்ளைகளோடு தாய் வீட்டில் வசித்து வருகிறார். சின்னகாளி என்பவருக்கு பூர்வீக சொத்து 6 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கீதா பெயரில் ஒரு சொத்தை எழுதி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் மேலும் உள்ள சொத்தை எனது பெயருக்கு எழுதி வைக்கும்படி கீதா கேட்டதாக தெரிகிறது.

ஆனால், கீதா மீது எழுதி வைக்காமல் சின்னகாளி அவரது கள்ளக்காதலன் பெயரில் எழுதி வைக்க திட்டம் போட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த கீதா சொத்தை என் பெயரில் தான் எழுதி வைக்க வேண்டும் நான்தான் உன்னை பார்த்து கொள்கிறேன். அவன் யாரு அவன் பெயரில் எழுதி வைக்க என கேட்டு கடந்த வாரம் சண்டை போட்டு உள்ளார். 

ஆனால், சின்னகாளி கீதா பெயரில் சொத்தை எழுதி வைக்க முன்வராத காரணத்தினால் சின்னகாளி மீது கடுமையான கோபத்தில் கீதா இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சின்னகாளி நான் சாகும் வரைக்கும் என் சொத்தை உனக்கு தர மாட்டேன் எல்லாம் என் முடிவு தான் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பல நாட்களாக திட்டம் போட்டு, ‘நீ இருந்தால் தானே சொத்தை எனக்கு தரமாட்டாய் நீ செத்து போ சொத்தை நான் எடுத்து கொள்கிறேன்’ என்று கீதா தனது கானவருடன் சேர்ந்து தாயை போட்டு தள்ள திட்டம் போட்டு உள்ளனர். 

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுகுப்பம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே உள்ள காட்டிற்குள் உன் மருமகன் எங்கோ போய் இருக்காங்க வா போய் தேடி வரலாம் என்று கூறி கீதா தனது தாய் சின்ன காளியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு மறைந்து இருந்த மருமகன் சிதம்பரம் (25) சின்ன காளியிடம் சொத்து குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மகள் கீதா தாய் சின்ன காளியின் கையை பிடித்து கொண்டுள்ளார். அப்போது கல்லை கொண்டு சிதம்பரம் மாமியாரின் தலையில் தாக்கி உள்ளார். இதனால் மயக்கம் அடைந்த சின்ன காளி சுருண்டு விழுந்துள்ளார். 

பின்னர், இருவரும் உயிர் போகும் வரை அங்கேயே இருந்து விட்டு கொலையை சின்னகாளியின் கள்ளக்காதலன் செய்ததுபோல கொலையை சித்தரித்து, இறந்த சின்னகாளி அணிந்து இருந்த ஆடைகளை கலைத்து விட்டு சம்பவ இடத்தில் பூ, கர்சீப் போட்டுவிட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவாறு மாஸ்டர் பிளான் போட்டு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதிகாலை வேலைக்கு செல்லாத சிதம்பரம் சம்பதன்று விடியற்காலை வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் இறந்து விட்டார் என்று காலையில் அக்கம் பக்கத்தினர் பார்க்கும் வரை அமைதி காத்து எதுவும் தெரியாதது போல எங்க அம்மா எங்கே எங்க அம்மா எங்கே என்று அருகில் உள்ளவர்களிடம் கேட்டு நாடகம் ஆடி உள்ளனர். பின்னர் உங்க அம்மா ஆடை இல்லாமல் இறந்து கிடக்கிறாள் என்று அக்கம் பக்கத்தினர் கூறிய பின்பு என்று கொஞ்சம் கூட கண்ணீர் வராமல் அழுது உள்ளார். 

பின்னர் இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் பிரேத பரிசோதனை செய்ய வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை நடந்ததுபோல எதுவும் தெரியவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் விசாரணையை வேறு கோணத்தில் திருப்பிய டி.எஸ்.பி தனிப்படை போலீசார் மருமகன் பேச்சில் படபடப்பு தெரிந்த காரணத்தினால் கிடுக்கு பிடி விசாரணை செய்து உள்ளனர். சிதம்பரத்தின் உடலில் ஆங்காங்கே கீறல் காயம் ஏற்பட்டு இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவன் மனைவி இருவரையும் தனித்தனியாக  விசாரணை செய்த போது சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது அம்பலம் ஆனது. எப்படி செய்தாய் எங்கு செய்தாய், என்ன செய்தாய் என்று காட்டு என்று மருமகன் சிதம்பரத்தை சம்பவ இடத்திற்கு அழைத்த சென்று விசாரணை நடத்தியதில் குற்றம் உறுதி செய்யப்பட்டு பின்னர் கணவன், மனைவி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் கீதாவையும், ஆண்கள் மத்திய சிறையில் சிதம்பரத்தையும் அடைத்தனர். 

தாய் இறந்து விட்டால் சொத்தை நாமே எடுத்து கொள்ளலாம் எதற்கு கேட்டு கொண்டு என்று நினைத்து திட்டம் போட்டு தாயை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் கொன்றதாக நாடகம் ஆடிய மகள் மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.