நாட்டறம்பள்ளி அருகே தன் கணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளி(40). இவருடைய கணவர் வாஜ்பாய் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர் தன் இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் இவர் அதே கிராமத்தை சேர்ந்த பெருமாளப்பன் கோவில் தெருவை சேர்ந்த சௌந்தரி(36) என்பவரின் கணவர் ஆறுமுகம்  என்பவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே சௌந்தரி வள்ளியை கண்டிததாகவும் தெரிகிறது.

இதனை பொருட்படுத்தாமல் வள்ளி ஆறுமுகத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இன்று சௌந்தரி வள்ளியின் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அப்போது சௌந்தரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வள்ளியின் கழுத்தை அறுத்தும் வயிற்றில் குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

 

பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவரை பரிசோதிக்க மருத்துவர்கள்  மேல் சிகிச்சைக்காக  கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

அங்கிருந்து தப்பிச் சென்ற சௌந்தரி அம்பலூர் காவல் நிலையத்தில் கத்தியுடன் சரண் அடைந்தார். சம்பவம் நடந்த இடம் நாட்டறம்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் பின்னர்  நாட்டறம்பள்ளி போலீசாரை வரவழைத்து அவரை ஒப்படைத்தனர்.

 

இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.