நெல்லை மேலப்பாளையம்  பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அம்சா. இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது மகனான செய்யது தாமின் (31) என்பவர் மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். குறிப்பாக பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளும் இவர் செய்து வருகிறார். மேலப்பாளையம் அம்பை சாலையில் உள்ள கடையில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவில் வீடு திரும்பிய செய்யது தாமின் இரவு உணவை முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக வீட்டில் சொல்லி மீண்டும் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் கடைக்கு சென்று நெடுநேரம் ஆகியும் செய்யது தாமின் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அவரை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காத நிலையில் அவரது தந்தை  நேராக கடைக்கு சென்று பார்த்துள்ளார். கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.


உடனடியாக உள்ளே சென்று பார்த்த செய்யது தாமின் தந்தை அதிர்ச்சியடைந்தார். செய்யது தாமின் கடைக்குள் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட தந்தை கதறி அழுதுள்ளார். மேலும் இது தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செய்யது தாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டதுடன் கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாநகர காவல் துறையின் மோப்ப நாய் பரணி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தினால் மேலப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்களது குடும்பத்திற்கான சொத்து பல்வேறு இடங்களில் உள்ள நிலையில் சொத்து பிரச்சனைக்காக இந்த கொலை நடந்துள்ளதா?அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இச்சூழலில் இக்கொலை குறித்து காவல்துறை தரப்பில் கூறும் பொழுது, இறந்த செய்யது தாமின் குடும்பத்திற்கும், நெல்லை சீதபற்பநல்லூர் அருகே சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருக்கும் சீதபற்பநல்லூர் பகுதியில் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பகையின் காரணமாக பேச்சிமுத்துவும், அவரைச் சேர்ந்தவர்களும் செய்யது தாமினை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவருகிறது என தெரிவித்தனர். மேலும் இவ்வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நெருக்கம் அதிகமுள்ள மேலப்பாளையம் பகுதியில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.