திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முத்துகிருஷ்ணன் முதல் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரது மனைவி கவிதா ( 47 ). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . பெரிய மகளுக்கு திருமணம் ஆகி கணவன் வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனால் சிறிய மகள் அக்காவிற்கு துணையாக அக்கா வீட்டில் இருந்து வருகின்றார்.


இந்நிலையில் கவிதா திண்டிவனத்தில் இயங்கி வருகின்ற பெல் ஸ்டார்  தனியார் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் கட்டும் கடன் பெற்றுள்ளார். இதனை சரியான முறையில் கட்டி வந்த கவிதா, கடந்த சில நாட்களாக சரியான வருமானம் இல்லாத நிலையில் கடன் தவணையைக் கட்டத் தவறியதாக கூறப்படுகின்றது.


இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து  கடன் தவணைத் தொகையை கேட்டு  கவிதாவுக்கு தொல்லை  கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மனம் உடைந்த கவிதா, நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில்   வீட்டின் உள்ளே தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, கவிதா தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திண்டிவனம் போலீஸார் ,பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்தோடு, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


பல்வேறு பகுதிகளில் தனியார்  நிதி நிறுவனங்கள் ஆசை வார்த்தைகளை கூறி கடன் தொகையை கொடுத்துவிட்டு, மீண்டும் வசூலிக்கும்போது, பெண்களிடம்  பல்வேறு கெடுபிடிகளை காட்டுகின்றன. இத்தகைய நிதி நிறுவனங்களை  கண்டறிந்து  துறை சார்ந்த அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றைத் தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060