திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 1250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகளை க்யூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். வேனும் பறிமுதல் செய்தனர்.




தூத்துக்குடி மாவட்டம் கடலோரப்பகுதிகளிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், மஞ்சள், பூச்சி கொல்லி மருந்துகள், களை கொல்லி மருந்துகள் அன்றாடம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க க்யூ பிராஞ்ச் போலீசார், கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார், கடலூர் காவல் படை ஆகியோர் கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலந்தலை கடற்கரையிலிருந்து வேனில் பிடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. க்யூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப் இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ் செல்வகுமார் ஏட்டுக்கல் ராமர் இருதயராஜ், போலீஸ் பழனி பாலமுருகன் ஆகியோர் ஆலந்தலை அருகே வடக்கே கணேசபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ரோடு வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் 42 மூட்டையில் 1250 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருப்பதும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.




சம்பவத்தில் வேனில் வந்து ஆலந்தலையைச் சேர்ந்த தொம்மை மகன் ராஜா(29), தூத்துக்குடி எஸ்எஸ் மாணிக்கபுரத்தைச் சேர்ந்த டிரைவர் பாலமுருகன்(35) ஆகியோரை கைது செய்தனர். பிடிப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். சமீபத்தில் காயல்பட்டணம் ஓடக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மூட்டை பீடி இலைகளை க்யூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப் வரை 10க்கு மேற்பட்ட சம்பவத்தில் சுமார் 15 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக க்யூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்தனர்.




கடந்த சில தினங்களுக்கு முன் காயல்பட்டிணம் அருகே ஓடக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் பீடி இலைகளை ஏற்றிக்கொணடிருந்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அப்படியே ஓட்டு விட்டு ஓடி விட்டனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அந்தோணி துரை (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.15 லட்சம் மதிப்பிலான 80 பீடி இலைகளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது