திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள மேலப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் வயது (70). இவர் தனியாக வசித்து வருகிறார். சென்னம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கார் ஒன்று அங்கு வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத பெண் உள்பட 3 நபர்கள், வீட்டிற்குள் சென்றனர். அவர்கள் சென்னம்மாளிடம், உங்கள் கணவர் பாலகிருஷ்ணனிடம் ஆயிரம் ரூபாய் கடன் பெற்று இருந்தோம். அதனை தர வந்துள்ளதாக கூறி ஆயிரம் ரூபாயை சென்னமாளிடம் கொடுத்து உள்ளனர். அதனை வாங்கிய அவர் திடீரென மயக்கம் அடைந்தார். சிறிது நேரம் மயங்கிய நிலையில் சென்னம்மாள் இருந்தபோது, வீட்டில் இருந்த பவுன் நகை மற்றும் பணத்தை அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பியுள்ளனர்.


 




நூதன முறையில் நகை கொள்ளை


மயக்கம் தெளிந்த சென்னம்மாள் வீட்டில் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்பொது பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனடியாக சென்னமாள் கூச்சலிட்டவாரே வீட்டின் வெளியே ஓடிவந்துள்ளார். வீட்டில் அருகே உள்ள நபர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் செங்கம் காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சென்னம்மாளிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையடித்து தப்பிய கும்பல் ரூபாய் நோட்டில் மயக்க மருந்து தடவி சென்னம்மாளிடம் கொடுத்து அவரை மயக்கம் அடைய செய்து கொள்ளையில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஒரு மூதாட்டியிடம் உறவினர் என்று கூறிக்கொண்டு புகுந்த பெண் நலம் விசாரிப்பதுபோல் 8 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பினார்.




 


தனியாக வசிக்கும் மூதாட்டியிடம்  கொள்ளையடிக்கும் மர்மகும்பல் 


காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆண்களுடன் காரில் வந்து தனியாக வசிக்கும் பெண்கள் உள்ள வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை இந்த கும்பல் வழக்கமாக வைத்துள்ளது. இதில் ஈடுபட்ட பெண் அரூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பதால் செங்கம், கலசபாக்கம் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். காவல்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.