Crime :  கருத்தரிக்காமலே குழந்தை பிறந்தாக இளம்பெண் ஒருவர் நாடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் பகுதியில் வசிப்பவர் மூர்த்தி. இவரது உமா மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேல் ஆனாது. இந்த நிலையில், உமா மகேஸ்வரி கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உமா மகேஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டதாக, நேற்று மாலை வேலப்பன்சாவடி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், சிறிது நேரம் கழித்து தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஒரு குழந்தையின் புகைப்படத்தை கணவர் உட்பட உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் உமா மகேஸ்வரி அனுப்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதால், மருத்துவர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று கூறி, என்னிடமிருந்து குழந்தையை எடுத்துச் சென்றனர்.


ஆனால் இப்போது எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறி தன்னை ஏமாற்றுகின்றனர் என்றார். இதனை  அறிந்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். உமா மகேஸ்வரிக்கு குழந்தை பிறக்கவில்லை என்று ஏமாற்றியதால், மருத்துவர்கள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மருத்துவமனையில் வாக்குவாதம் நீடித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், உமா மகேஸ்வரி  தற்போது இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாக எந்த தகவலும் இல்லை என்பது தெரியவந்தது.


அதே சமயம், அன்றைய தினம் அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் மருத்துவமனையில் இல்லை. இதனை அடுத்து, உமா மகேஸ்வரியை மருத்துவர்கள்  பரிசோதனை செய்தனர். அதில் கர்ப்பமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் போலீசார் உமா மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.


திருமணமாகி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக கணவர் வீட்டாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அவருக்கு வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக அவரின் தாய் வீட்டிற்கு அனுப்பினார்கள். சம்பவத்தன்று தனது வலி ஏற்பட்டு தனது தாயுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கணவர் குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் தனக்கு குழந்தை பிறந்தாக ஒரு புகைப்படத்தையும் கணவருக்கு அனுப்பி உள்ளார். 


அதற்கு பின்னர்தான், தன்னுடைய குழந்தையை மருத்துவர்கள் எடுத்துக் கொண்டனர் என்று சொல்லி பிரச்சனை செய்திருக்கிறார். தன்னுடைய கணவர் வீட்டாரை ஏமாற்ற கர்ப்பம் ஆகாமலேயே குழந்தை பிறந்ததாக சொல்லி நாடகமாடியது விசாரணையில் தெரிந்தது. இதனால் அந்த பெண்ணையும், அவரது தாயாரையும் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.