தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அங்கு கடை நடத்தி வரும் நிலையில் அந்த கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாட்டை காரணம் காட்டி திண்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் ஜாதி தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர். இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திர மூர்த்தி, குமார் மகேஷ்வரன் ஆகிய குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் முருகன், சுதா ஆகிய இருவரை தேடி வரும் நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள்ள நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பத்மநாபன் குற்றவாளிகள் 5 பேருக்கு 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்