செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



செங்கல்பட்டு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிவசங்கர் பாபா தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கர் பாபா சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற பிறகு சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றிருந்தனர்.

 



இந்நிலையில் சிவசங்கர் பாபா மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டு தற்பொழுது சென்னை நீதிமன்ற சிறை காவலில் சிவசங்கர் பாபா இருந்துவருகிறார்.

 

இந்நிலையில் செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மற்றும் ஆசிரியை சுஸ்மிதா ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 15ஆம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி இந்த வழக்கை  19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இதனைத் தொடர்ந்து இன்று சிவசங்கர் பாபாவின் ஜாமீன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.



சென்னை சிபிசிஐடி போலீசார் தரப்பில் இருந்து , சிவசங்கர் பாபாவின் மீது, தற்போது மூன்று போக்சோ வழக்குகள் உள்ளதால், சிவசங்கர் பாபா  ஜாமீனில் வெளிவரும் பட்சத்தில், ஆதாரங்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என வாதத்தை முன்வைத்தனர். சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சிவசங்கர் பாபா மற்றும் சுஷ்மிதா ஆகிய இருவர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.