செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா. தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. தாக்கல் செய்துள்ளனர்.



சிவசங்கர் பாபாவுக்கு எதிராக இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தயாராகிவிட்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது சில நாட்களில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் அளித்த  வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

 

ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதே காரணத்தை கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ளார். சென்னை அரசு பொதுமருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் தனக்கு ஆண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவசங்கர் பாபா ஆன்மீகப் பணிக்கு வருவதற்கு முன்பாக அவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.