சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே 33 வழக்குகளில் தொடர்புடைய ஏ.பிளஸ் கேட்டகரி ரவுடி கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து வெட்டிவிட்டு தப்பிச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலாமணி என்பவரின் 30 வயது மகன் ஊர்க்காவலன். இவர் மீது இரு கொலை வழக்கு, இரு கொலைமுயற்சி வழக்குகள் உட்பட சுமார் 33க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஏ.பிளஸ் கேட்டகரி ரவுடியாக காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட நபராவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பே சிறைச்சாலையில் இருந்து பெயிலில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் வைத்தே காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டியதுடன் முகத்தை முழுவதுமாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ந்த கிராம மக்கள் திருப்பாச்சேத்தி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இறந்த ஊர்காவலனை கடந்த மார்ச மாதம் 7 ஆம் தேதியன்று பிடிக்க சென்ற காவலர்களை வெட்டி முயன்றதாக காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
