வசதியாக வாழ்ந்தது பிடிக்கவில்லை

 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடவூர் கிராமத்தைச் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த  சேர்ந்த ராமன் - செல்லம்மா தம்பதிகளின் மகன் அய்யாசாமி (வயது19). இவர் சிவகங்கையில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி., மேக்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமியின் அப்பா சிறுவயதிலேயே இறந்து விடவே அவருடைய அம்மா அய்யாசாமியின் அப்பாவின் தம்பியான பூமிநாதனை இரண்டாவதாக திருமணம் செய்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அந்த கிராமத்தில் சற்று வசதியாகவும், புதிதாக வீடுகள் கட்டியும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இது அதே கிராமத்தில் வாழ்ந்து வந்த மாற்று  சமூகத்தை சேர்ந்த இளைஞர்களான வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு இவர்களுக்கு பிடிக்கவில்லை.
 

நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்

 
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பூமிநாதன் (சித்தப்பா) புதிதாக புல்லட் பைக் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய மறுநாளே இவர்கள் அந்த பைக்கை அடித்து உடைத்து உள்ளார்கள். பூமிநாதனையும் அடிக்க முயற்சித்துள்ளார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். பிறகு ஊரில் வைத்து பேசி முடித்துள்ளார்கள், இதனை தொடர்ந்து நேற்று மாலை இளைஞர் கல்லூரி முடித்துவிட்டு வீடு வரும் பொழுது வீட்டின் அருகே வழி மறித்து ( குறிப்பிட்ட) இந்த ஜாதியில இருந்துகிட்டு எங்க முன்னாடியே நீ எல்லாம் எப்படிடா புல்லட் ஓட்டலாம்.. என்று கூறி இளைஞரின் இரண்டு கைகளையும் வெட்டி உள்ளார்கள் கை இருந்தால்தானே ஓட்ட முடியும் என்பது என்ற நோக்கத்துடன் அவர் கையை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 

வீட்டை அடித்து சேதம்

 
இந்நிலையில் அவரை அழைத்துக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே அங்கிருந்து உயர் சிகிச்சையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் பூமி நாதனின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்கள். இதில் ஜன்னல், கதவு, ஸ்விட்ச் போர்டு, வீட்டின் ஓடு சேதம் அடைந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே இதில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு மூன்று பேரையும் கைது செய்து சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  விசாரித்து வருகின்றனர். இதில் வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது காயமடைந்த ஐயா சாமிக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் சேர்ப்பதற்காக அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.