சிவசங்கர் பாபா வற்புறுத்தியதால் தான் நாங்கள் மாணவிகளிடம் பேசி ரகசிய அறைக்கு அழைத்து வந்தோம் என 3 ஆசிரியைகள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின் படி 3 வது போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து சிவசங்கர்பாபா புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதுவரை சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட 18 முன்னாள் மாணவிகள் சிபிசிஐடி போலீசாரிடம் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, சிபிசிஐடி போலீசார் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிய மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சுசில் ஹரி பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரின் தங்கையையும் ஆசீர்வாதம் செய்வதாக கூறி சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி அளித்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து கடந்த 11ம் தேதி சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலிசார் 2 வது போக்சோ வழக்கிலும் கைது செய்தனர்.