கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் தனது வீட்டின் முன்பு காரை வழக்கம்போல் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று பகல் சுமார் 3 மணி அளவில், அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்த நேரத்தில், ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார். காரின் முன்புறத்தில் தனது வாகனத்தை நிறுத்திய அவர், முதலில் சுற்றுப்புறத்தை நோட்டமிட்டு யாரும் இல்லையா என்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்திருந்த கல்லை எடுத்து, நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடி மீது பலமாக வீசி தாக்கியுள்ளார். இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. சம்பவத்திற்குப் பிறகு, காரின் அருகில் உள்ள சாக்கடை பகுதியில் எதையோ தேடுவது போல் சில நிமிடங்கள் நடந்து கொண்ட அந்த நபர், பின்னர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Continues below advertisement

பின்னர் காரின் கண்ணாடி உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார், அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, முழு சம்பவமும் பதிவாகியிருப்பது தெரியவந்தது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரில் சிசிடிவி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், துணிச்சலாக இதுபோன்ற சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.