செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியின் தாளாளர் சிவசங்கர்  பாபா சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அழைத்து வந்து விட்டதாக மாணவிகள் அளித்த புகாரின் படி சுசில் ஹரி பள்ளியில் வேலை செய்து வரும் 5 ஆசிரியைகள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 5 ஆசிரியைகளும் சிபிசிஐடி போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் 5 ஆசிரியைகளுக்கும் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து நேற்று 3 ஆசிரியைகள் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மொத்தம் மூன்று போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது உள்ளது. இந்நிலையில் முதல் வழக்கில் சிறையிலிருந்த பாபாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 



 

அப்போது அவருக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக பாபாவை காண அவரது ஆதரவாளர்களும் பக்தர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். அப்போது அவர்கள் 'சங்கரா சிவ சங்கரா' பாடலை பாடி சிவசங்கர் பாபாவை வணங்கினர். இதனைத் தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்திய செங்கல்பட்டு நகர போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

 



நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சிவசங்கர் பாபாவைக்காண தடுப்புகளை உடைத்து கொண்டு பாபாவின் ஆதரவாளர்கள் முன்னேறி சென்றனர் . இதனால் போலீசாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீசார் வேனில் ஏற்றி புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

முன்னதாக, இதுவரை சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட 18 முன்னாள் மாணவிகள் சிபிசிஐடி போலீசாரிடம் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, சிபிசிஐடி போலீசார் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிய மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சுசில் ஹரி பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரின் தங்கையையும் ஆசீர்வாதம் செய்வதாக கூறி சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி அளித்ததாக கூறப்படுகிறது.




சுஷில் பள்ளி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிரியைகள் பள்ளி மாணவிகளிடம் பாபாவின் ஆசீர்வாதம் கிடைத்தால் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை சிவசங்கர் பாபாவின் ரகசிய அறைக்கு அழைத்து வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.