கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணி புரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை சக மாணவிகளிடம் கூறி மாணவி கதறி அழுதுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன்  சக்கரவர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாணவி பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று வெளியேறினார். பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்ந்தார். ஆனாலும் அந்த ஆசிரியர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு மாணவியை மிரட்டி உள்ளார். மேலும் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளார். 


இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த மாணவி கடந்த 2021-ஆம் ஆண்டு வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து ஆர்.எஸ். புரம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உட்பட 3 பேரை கைது செய்தனர். மாணவிக்கு சிறு வயது முதலில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 70 வயது முதியவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டப் பிரிவில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 


இந்நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனா  கைது செய்யப்பட்டார். இவரும் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மாணவி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக முறையிட்ட பின்னும் உரிய தகவல் காவல் துறைக்கு வெளியிடாமல் இருந்ததற்காகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் அர்ச்சனா மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஆசிரியரின் மனைவி கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் கூறும் போது, ”செல்போனில் பேசிய ஆடியோ கோப்புகள் மற்றும் பிற ஆவணங்கள் மீட்டெடுக்க தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போன் சென்னையில் உள்ள சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மனைவி அர்ச்சனாவை செல்போனில் தொடர்பு கொண்டு அவரது கணவர் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்ததை காவல் துறைக்கு ஆடியோ கோப்புகள் மற்றும் உரையாடல்கள் மீட்டெடுக்கப்பட்டததாக தெரிய வந்துள்ளது. கோப்புகளை சரி பார்த்த பிறகு மாணவிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்துறையினருக்கு புகார் செய்யவில்லை என தனியார் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அர்ச்சனாவை கைது செய்தோம்” எனத் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண